செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள்: 112

மு.வரதராசனார் உரை

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

கலைஞர் உரை

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

குன்றக்குடி அடிகளார் உரை

நடுவு நிலைமையுடையவனது செல்வம் அழியாது அவனுடைய வழியினர்க்கும் பாதுகாப்புத்தரும். எச்சத்திற்கு - அவன் வழித் தோன்றல்களுக்கு என்பது பொதுவான கருத்து. ஒருவர் இறந்த பிறகும் அதை அவர் நினைவாக எஞ்சியிருப்பது எச்சம். இங்ஙனம் எஞ்சி நிற்பது வழித்தோன்றல்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய புகழ் எஞ்சி நிற்கும். ஒருவர் நடுவு நிலையுணர்வுடன் செல்வத்தை ஈட்டினால் அதனால் வரும் புகழ் அவருக்குப் பாதுகாப்பாக அமையும் என்று கொள்ளுதலும் பொருந்தும்.

மணக்குடவர் உரை

நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

பரிமேலழகர் உரை

செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் ‘எச்சம்’ என்றார்.).

English

The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

G.U. Pope’s Translation

The just man’s wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure.

மொத்த சொற்கள்: 186

முந்தைய குறள் அடுத்த குறள்

12. நடுவு நிலைமை பிற குறள்கள்

115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.